Wednesday, October 21, 2009

அதிமுகவின் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் நடைபெறும் ஒரு பெரிய அளவிலான உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அதன் தலைவி அறிவித்துள்ளார். இது மிகவும் வேதனைக்குரியது. தமிழக முதல்வர் அவர்கள் தனது அழைப்பில் கட்சிப் பாகுபாடுகளை மறந்து இந்த தமிழ் மாநாட்டிற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் இவ்வாறு அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது வேதனைக் குரிய விஷயம். தமிழ்நாட்டில் தமிழுக்கென்று ஒரு மாநாட்டை நடத்துவதற்கு உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தைக் கேட்க வேண்டும். அதன் அனுமதியில்லாமல் நடத்தக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம். சர்வதேச தமிழ் அராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும், தமிழ் மொழி தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்கு ஒரு உரிமையுள்ள சொத்து. அத்தகைய ஒரு சொத்திற்காக ஒரு விழாவினை எடுப்பதற்கு உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் உரி‍மையைக் கோர வேண்டும் என்பது கேலிக்குரிய கூற்று. இதை சொல்பவர்கள் நாளை தமிழுக்கான காப்புரிமை அந்த நிறுவனத்திற்குத்தான் உள்ளது, அவர்கள் அனுமதியின்றி தமிழில் பேசவோ எழுதவோ கூடாது என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. உண்மையில், தமிழக முதல்வருக்கு அத்தகையதொரு விழாவை நடத்துவதற்கு முழு உரிமையுள்ளது. அவர் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளவர். உலகில் உள்ள அத்தனைக் கோடித் தமிழர்களுக்கும் இவரைப் பற்றி நன்கு தெரியும். தமிழராக இல்லாத தமிழ் ஆர்வலர்களுக்கும் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். எத்தனை உரைகள் எழுதியுள்ளார். எத்தனை காவியங்கள் தமிழ் படைத்துள்ளார். அத்தகையதொரு தமிழர் நடத்தும் விழாவைப் புறக்கணிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறதே தவிர, அவர்தம் நல்ல எண்ணத்தை அல்ல. அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு, பெருந்தன்மையோடு இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்குவார் என்று நம்புவோம். அவருடன் இருக்கும் அவருடைய கூட்டாளியாவது அவருக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தமிழர்களுடைய பெருமையை இப்போதாவது காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.

பொறுத்திருப்போம்....

Saturday, September 27, 2008

மதச்சார்பின்மை எது?!!!

இது முற்றிலும் சொந்தக் கருத்து, இதை நான் எந்த மதத்தினரும் புண்பட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. என் மனதில் உள்ள சில உணர்வுகளை தெரிவிக்கவிரும்புவதால் கூறுகிறேன். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற திருமூலரின் மூலமந்திரமே என்னுடைய கொள்கையும் கூட. இருப்பினும் அரசியல் நோக்கங்களுக்காக இங்கு நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது ஒரு சராசரி மனிதனாக இந்தக் கேள்விகளை நான் கேட்க வேண்டியுள்ளது.
1. மதச்சார்ப்பின்மை என்றால் இந்து மதத்தினை மட்டும் சாராதிருப்பதா?
2. மதச்சார்பின்மையைப் பேசும் கட்சிகள் இந்து மதத்தினரையும், இந்துக் கடவுகள்களையும் இழிவுப்படுத்துவது எப்படி அவர்கள் கொள்கைக்கு பொருத்தமாகும்?
3. பிற மதங்களின் பண்டிகைகளில் பங்குகொள்பவர்கள் இந்து மதத்தின் பண்டிகையை மட்டும் கேவலப்படுத்துவது ஏன்?
4. வன்மு‍றையில் ஈடுபடுவதெல்லாம் இந்துக்கள் தான் என்றால் ஆங்காங்கே நிகழும் குண்டுவெடிப்புகளுக்கு இந்துகள் காரணம் அல்லவே?!
5. சபரி மலைக்கு செல்லும் போது வாவரை (பாபர்) தர்காவில் வணங்குவது இந்துக்களின் மதச்சார்பின்மை. நாகூர் தர்காவுக்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் செல்வது இந்துக்களின் மதச்சார்பின்மை. அப்படி இருக்க அமர்நாத் கோவிலுக்கு இடம் வழங்கக்கூடாது என்று போராடுபவர்களையும், பிரிவினைவாதத்தைத் தூண்டுபவர்களையும் ஆதரிப்பவர்களும் எப்படி மதச்சார்பற்றவர்களாவர்?
6. சாதிகள் தான் மதமாற்றத்திற்கு காரணம் என்றால், மதம் மாறிய பிறகும் சாதிகள் அடிப்படையிலான உரிமைகளுக்காக மாறியவர்கள் போராடுவது ஏன்?
7. கடைசியாக ஒரே கேள்வி, மத(மன)மாற்றத்தை வற்புறுத்துபவர்களுக்கு இது... நீங்கள் சொல்லும் கடவுள் தான் உண்மையான கடவுள் என்றால் அவர் ஏன் பல்வேறு மதத்தினராகவும், இனத்தினராகவும் மனிதர்களைப் படைக்க வேண்டும்?
என்னைப் பொறுத்தவரை உண்மையான மதச்சார்பின்மை என்பது அடுத்த மதங்களையும் மதிப்பதுதான். எனக்கு கிறிஸ்தவ நண்பர்களும் உண்டு, இஸ்லாமியர் நண்பர்களும் உண்டு. மதரீதியாக அவர்களின் கடமையான பிரார்ததனை செய்வதையும், தொழுவதையும் அவர்கள் செய்யாத போது அதைக் கண்டித்திருக்கிறேன். நான் பிறந்த மதம் எனக்கு காட்டிய நல்ல வழிகளை பின்பற்றாத போது நான் அடுத்த மதத்திற்கு மாறுவதனால் எந்தப் பயனும் இல்லை. இறைவன் ஒருவன் அவனை நாம் விரும்பிய வடிவில் வழிபடுகிறோம். அது மட்டும‍ே உண்மை, அவசியமும் கூட.
மனிதர்களின் மனங்களைப் புண்படுத்தாமல் தன் கடமைகளைச் செய்பவர்களே உண்மையாக மதத்தைப் பின்பற்றுபவர்கள், அது என் மதத்தினராக இருந்தாலும் சரி.
நான் இந்து என்பதில் உறுதியாக இருக்கிறேன், அதற்காக மற்ற மதத்தினரை எந்த விதத்திலும் தவறாக எடைபோடமாட்டேன். நானோ அவர்களோ அந்தந்த மதத்தில் பிறந்தது இறைவனின் விருப்பத்தின் பேரில்தான்.
நாம் நாமாக இருப்போம், மனிதர்களாக இருப்போம்!!!
வாழ்க! வளமுடன்!

Friday, September 26, 2008

ஏ‍டிஎம் பணம் எடுக்கிறீர்களா? ஜாக்கிரதை!!!!

நவீன ‍தொழில்நுட்பங்கள்.... தேவைக்கு உடனடி பணம்.... வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.... எந்த வங்கியின் ஏடிஎம்மில் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.... இ‍தெல்லாம் ஏடிஎம்களை பற்றிய சாதகமான விஷயங்கள்.... ஆனால் அவற்றிலும் பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன... வங்கிகள் இந்த பிரச்சினைகளை அலட்சியப்படுத்துவதுதான் வேதனைக்குரிய விஷயம்... இதோ எனது அனுபவம்....
கடந்த ஜுன் மாதம் 5-ஆம் தேதி சொந்த வேலைக் காரணமாக கரூருக்கு சென்றிருந்தேன். அவசரத் தேவைக்காக பணம் எடுக்க வேண்‍டியிருந்ததால், எனது வங்கியான ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இருக்கிறதா என்று விசாரித்தேன். சரியாக ‍தெரியாததால், பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஐசிஐசிஐ ஏடிஎம்மில் சென்று எனது டெபிட் கார்டை ‍செலுத்தினேன். அனைத்து செயல்பாடுகளும் நன்றாகவே இருந்தது, பணம் எடுக்கும் வேளையில் நெட்வொர் துண்டிக்கப்பட்டுள்ளதாக பணம் எடுக்கமுடியவில்லை என்ற ஒரு தகவல் வந்தது. சரியென்று வெளியே வந்து விசாரித்ததில் ஒரு அரைக் கி‍லோ மீட்டர் ‍தொலைவில் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் பெட்ரோல் பாங்கில் இருப்பதாகக் கேள்விப்பட்டு திருச்சிக் கோவை சாலையில் நடந்து சென்றேன். அங்கு சென்றபோது, ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மூடப்பட்டிருந்தது, காவலுக்கு இருந்த செக்யூரிட்டி இயந்திரம் செயல்படவில்லை என்று தெரிவித்தார். இதனால் அதன் அருகிலேயே இருந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளையில் முயற்சிக்கலாம் என்று சென்றேன். அதிர்ஷ்டவசமாக அங்கு என்னால் பணம் எடுக்க முடிந்தது. ரூ. 3000 மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியில் வந்த சில நொடிகளில் எனது மொபைல் போனுக்கு வங்கியிலிருந்து 6000 பணம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நான் உடனேயே ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு மையத்தைத் தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்தேன். அவர்கள் புகாரைப் பதிவு செய்து கொள்வதாகவும், தவறாக இருந்தால் 45 நாட்களில் தாமாகவே அந்த பணம் எனது கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும் என்று தெரிவித்தார் அந்த அலுவலர். 45 நாட்களாகியும் எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. பிறகு மீண்டு விசாரித்தபோது தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று மீண்டு ஒரு புகார் என்னைக் கொடுத்து 10 நாட்கள் கழித்துத் தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினர். மீண்டும் ஒரு 10 நாட்கள் கழித்துத் தொடர்பு கொண்டபோது, எனது கிளை வங்கியைத் தொடர்பு கொள்ளுமாறுத் தெரிவித்தனர். அவர்கள் தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்றும், தாங்கள் அதை பரீசிலப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் ஒரு மாதத்திற்குப் பின்னரும் ஒரு பதிலும் வரவில்லை. மீண்டும் ‍தொடர்பு கொண்ட போது, ஒரு பெண் அதிகாரி அதை தானே பரிசீலிப்பதாகவும், 10 நாட்களுக்குள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் எனது வங்கியின் ஸ்டேட்மென்டைப் பார்த்தபோது, அதில் அடுத்தடுத்த நிமிடங்களில் ரூ.3000/- எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் பிழை ஐசிஐசி‍ஐ வங்கி ஏடிஎம்மில் தான் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இறுதியாக கடந்த செவ்வாய்கிழமை அன்று இது குறித்து மீண்டும் எனது கிளையின் பெண் அதிகாரியைத் தொடர்பு கொண்டேன். அவருக்கு என்னை நினைவில்லை, பிரச்சினையை விளக்கிய பிறகு சற்று என்னை நினைவு கூர்ந்து, 10 நிமிடங்களில் என்னை மீண்டும் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்தார். ஒரு அரை மணி நேரம் கழித்து என்னைத் தொடர்பு கொண்ட அந்த பெண் அதிகாரி, அந்த பணம் எடுக்கப்பட்டது உண்மை தான் என்றும், அதற்கான பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் இல்லை என்று மறுத்தேன். உடன‍ே கோபமாக "அப்படியென்றால் நானா எடுத்தேன்?" என்னை கேட்டவர், வங்கி மேலாளருக்குத் தொடர்பை மாற்றினார். வங்கி மேலாளரும் பொறுப்பாக பதில் சொல்லாமல் எங்களுக்கு வந்தத் தகவல்படி நீங்கள் பணம் எடுத்தது உண்மை தான் என்று என் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துவிட்டார். என் ரூ. 3000/- பணம் பணம் போனதோடு மட்டுமல்லாமல் , என்னையே பொய்யனாக ஆக்கி என்னை மனம் வேதனைப்பட வைத்துவிட்டார்கள். 10 வருடங்களாக கணக்கை பராமரித்துவரும் எனக்கே இந்த நிலை என்றால், புதிதாக வருபவர்களின் நிலை என்னவோ. என் விதியை நொந்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.!!!
எனவே, நண்பர்களே
ଧ கூடுமானவரை உங்கள் வங்கியிலிருந்து மட்டுமே பணம் எடுக்கவும்.
ଧ பிற வங்கிகளில் எடுக்கும் போது அதற்கான ரேக்கார்டைப் பெற்றுக்கொள்ளவும்.
ଧ ரெக்கார்டை வினியோகிக்காத ஏடிஎம்களில் பணம் எடுப்பதைத் தவிர்க்கவும்.
நமது கடின உழைப்பினால் பணம் வங்கிகளுக்கு தானம் செய்ய வேண்டிய தேவையில்லை!!!!

Thursday, September 25, 2008

லெஃப்டினென்ட் கர்னல் "கபில்தேவ்"

1983, லார்ட்ஸ் மைதானம், இந்தியாவைப் பெருமைக் கொள்ளச் செய்தது. உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்து, மண்ணின் மைந்தனான "கபில்தேவ்" அன்று நிறைவேற்றியது, இந்திய அணித் தலைவராக. இன்று நிறைவேற்ற பொறுப்பேற்றிருப்பது, இந்திய இராணுவத்தின் ஒரு பொறுப்புமிக்க அதிகாரியாக...
கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுகளுக்குப் பிறகு தன்னார்வத்துடன் கபில்தேவ் இராணுவத்தில் இணைந்துள்ளது, இந்தியர்களுக்குப் பெருமைதரும் விஷயம். இது போன்று மற்ற பிரபலங்களும் இந்திய இராணுவத்தில் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டினால் இந்தியாவின் பலம் நிச்சயம் ஓங்கும்.

நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. அதற்கு கட்டாயமாக இராணுவத்தில் சேவையாற்றுவதற்கான ஒரு சட்டம் கொண்டுவந்தால் கூட நிச்சயம் வரவேற்கத் தக்க ஒன்றுதான். இதற்கு முன் உதாரணமாக கபில் தேவ் அவர்கள் இராணுவத்தில் லெஃப்‍டினென்ட் கர்னலாகப் பொறுப்பேற்றிருப்பது, மிக மிக வரவேற்கத்தக்க ஒரு விஷயமே!!!

இதை மற்றவர்களும் கடைபிடித்தால் நல்லதே!!!